மும்பை: இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் பிரபலங்கள் மீது பல பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட அவரது கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
இதனிடையே கடந்த ஆண்டு ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் குறித்து கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து கங்கனா மீது மும்பையில் உள்ள அந்தேரி நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக மனுவில் ஜாவித் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் கங்கனா மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதனிடையே தன் மீது தொடரப்பட்டுள்ள குற்றவியல் அவதூறு வழக்கை ரத்து செய்யகோரி கங்கனா ரணாவத் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கங்கனா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது கங்கனா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.